Monday 2 September 2013

பதிப்புரை

நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும்.

     சமயக் கணக்கர்கள், தத்தங் கொள்கைகளாகிய சமயத்தைப் பரப்புதற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிக் கண் சமய நுணுக்கங்களைக் காதைகள் வாயிலாகவும், எடுத்துக் காட்டு, அளவைகள் முதலிய வாயில்களாகவும் எழுதி நிலைபெறச் செய்யலாயினர். அதுகாரணமாகக் காலத்துக் கேற்றவாறு மொழியை வளர்த்து வளம்படுத்துவாருமாயினர். அந்நிலையில் நந்தமிழ் மொழிக்குச் சமண சமயத்தார் செய்த தொண்டுகள் அளப்பற்றனவாகும்.

     இச் சமணரால் ஒருகாலத்து நம் தமிழ்மொழி வளம்பெறலாயிற்றெனின், அது மிகையாகாது. அச்சமண சமயத்தை வளர்க்க நம் தமிழ்மொழியில் பேரிலக்கியங்களாகவும், தமிழர் நாகரிகப் பண்பை விளக்கும் வரலாற்று நூல்களாகவும் திகழும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், நம்பியகப் பொருள் போன்ற இலக்கணங்களும் பிறவும் எழுந்தன.

     இத்தகைய சமணர்தம் கொள்கையையும் வரலாற்றுண்மைகளையும் நம் தமிழக மக்கள் நன்குணர்ந்து கோடற்கு வாய்ப்பாகப் பழங்கால இலக்கியச் சான்று, கல்வெட்டு, ஆராய்ச்சிக் குறிப்புகளின் துணைகொண்டு தம் அஃகி அகன்று பரந்த அறிவால் திரு.மயிலை.சீனி.வேங்கடசாமியவர்கள் எழுதி உதவியுள்ளார்கள்.

     சிறந்த வரலாற்று நூலாகிய இதனை நல்முறையில் பதித்து வெளியிட்டுள்ளோம். தமிழகம் இந்நூலை ஏற்றுப் போற்றி எம்மை ஊக்குவிக்குமென நம்புகிறோம்.

                                       சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்

முன்னுரை

சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ''''ஊழ்'''' இதனை இது காறும் வெளிவராமல் செய்துவிட்டது.

     பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந் நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் "பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?" என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள், "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படிக் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக் குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு  தெரியவில்லை யென்றால், பாமர மக்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லையே.

     முற்காலத்தில், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு விட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது தமிழ் நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமிழ்நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்குகொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந் நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ் சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு.ச.த.சற்குணர்.க.இ., அவர்கள் ஆவர். அப் பெரியாரின் ஆன்மா சந்தியுறுவதாக.

     வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று, ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும், அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காண வேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும்). வாழ்க்கைப் போரட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டியவரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, ''''ஊழ்'''' இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூறவிரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமர்களைப்பற்றியும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கூறவில்லை நான் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள ", கல்வித்துறையிலே மிகவுயர்ந்த நிலை பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லை யென்றால்  இந்நு£ல்களை ஏன் எழுதவேண்டும் ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

     பத்து ஆண்டுகள் கடந்தன. இந் நு£ல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருத்படியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கயைலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் வெளிவரும் வெளிவரும் என்று கூறினேனே யல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.

     உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள்    சிலர் இதனை வெயிடுமாறு வற்புறுத்தினார்கள். ‘கிருஸ்துவமும் தமிழும் ‘, ‘பௌத்தமும் தமிழும்’, எழுதியது தமிழ்நாட்டின் சமயவரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே ‘சமணமும் தமிழும்’ வெளிவரவேண்டும். அதுமட்டுமல்ல ‘இஸ்லாமும் தமிழும்’. ‘இந்துமதமும் தமிழும்’ என்னும் நு£ல்களையும் எழுதவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவசித்தாந்த நு£ற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு,வ, சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நு£லை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன்.அந்தோ! நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக்  கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப்போயிற்று. மீண்டும்  எழுத வேண்டியதாயிற்று.

     இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில்தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.

      வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுக் காலத்தைப் பயன்படுத்தி இந் நு£ல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங்களைந்து குணங்கொள்வாராக.

     இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

     இந்நூலின் பின்னிணைப்பில் சேர்ந்துள்ள “சமணசமயப் புகழ்ப்பாக்கள்” பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டவை.

     பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந் நு£ல் இப்போது முதன் முதலாக வெளிப்படுகிறது. இந் நு£ல் வெளிவருவதற்குக் காரணமாயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நு£ற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியவாகும்,

மலரகம், மயிலாப்பூர்                                                         மயிலை.சீனி. வேங்கடசாமி

சென்னை, 1-11-54

1. சமணசமயம் தோன்றிய வரலாறு

சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

     சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர்(வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்1 என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

     சமணக் கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

     சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும்.

     இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு;

     1. விருஷப தேவர்             13. விமல நாதர்

       (ஆதி பகவன்.)              14. அநந்த நாதர்

     2. அஜிதநாதர்.                   (அநந்தஜித் பட்டாரகர்)

     3. சம்பவ நாதர்               15. தருமநாதர்

     4. அபி நந்தனர்               16. சாந்தி நாதர்

     5. சுமதி நாதர்                17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்)

     6. பதும நாபர்                18. அரநாதர்  

     7. சுபார்சவ நாதர்             19. மல்லிநாதர்

     8. சந்திரப் பிரபர்             20. முனிசு வர்த்தர்

     9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்)      21. நமிநாதர்(நமிபட்டாரகர்)

     10. சீதள நாதர்                22. நேமிநாதர்(அரிஷ்ட நேமி)

     11. சீறீயாம்ச நாதர்             23. பார்சுவ நாதர்

     12. வாசு பூஜ்யர்               24. வர்த்தமான மகாவீரர்.



     தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.

     சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன;

     முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்த்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.



     இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

     தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு

கூறப்பட்டுள்ளன.

     பெயர்              உயரம்            ஆயுள்

   1. விருஷபர்             500-வில்        84 லட்ச பூர்வ ஆண்டு

   2. அஜிதநாதர்            450-வில்        71 "

   3. சம்பவநாதர்            400-வில்       60 "

   4. அபிநந்தனர்           350-வில்        50 "

   5. சுமதிநாதர்             300-வில்       40 லட்ச பூர்வ ஆண்டு

   6. பதுமநாபர்             250-வில்       30 "

   7. சுபார்சவநாதர்           200-வில்       20 "

   8. சந்திரப்பிரபர்           150-வில்        10 "

   9. புஷ்பதந்தர்            100-வில்        2 லட்ச பூர்வ ஆண்டு

   10. சீதளநாதர்             90-வில்        1  "

   11. சிறீயாம்சநாதர்          80-வில்        80 லட்சம் ஆண்டு

   12. வாசு பூஜ்யர்           70-வில்        72 "

   13. விமலநாதர்            60-வில்        60 "

   14. அருந்தநாதர்           50-வில்        30 "

   15. தருமநாதர்             45-வில்        10 "

   16. சாந்திநாதர்            40-வில்         1  "

   17. குந்துநாதர்            35-வில்        95 ஆயிரம் ஆண்டு

   18. அரநாதர்             30-வில்        84 "

   19. மல்லிநாதர்            25-வில்        55 "

   20. முனிசுவர்த்தர்         20-வில்        30 "

   21. நமிநாதர்              15-வில்        10 "

   22. நேமிநாதர்            10-வில்         1 "

   23. பார்சுவநாதர்           9-முழம்       100 ஆண்டு

   24. மகாவீரர்             7-முழம்        72 ஆண்டு

     இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களை கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

     ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் ‘சமயப்பற்று’ என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் ‘சமயக் கொள்கை’ என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

     சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

     உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப்பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. என்னை?

    அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்
    விரிகடல் சூழ்ந்த வியண்கண்மா ஞாலத்
    துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
    பெரியதன் ஆவி பெரிது.

என்பது பழமொழி நானூறு.

     இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும், மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

    தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திரகாலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்களாகிய முனிசு வர்த்தர், நமிநாதர், நேமிநாதர் பார்சுவநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். எப்படி என்றால், கூறுதும்.

    இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக்கொண்டு வரலாற்றாசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் இந்துக்களுக்கு (சைவ வைணவர்) உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இந்து, சமண இராமாயண பாரதக் கதைகளில் சில சிறு மாறுதல்கள் காணப்படுகிறபோதிலும் இரண்டும் ஒரே கதைகளாகும். இராமாயணமும் பாரதமும் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறபடியால், இராமாயண காலத்தில் இருந்த 20 ஆவது தீர்த்தங்கராகிய முனிசுவர்த் தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21 ஆவது தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும்2, அவருக்குப் பிறகு இருந்த பார்சுவநாத தீர்த்தங்கரரும். அவருக்குப் பிறகு புத்த பகவான் காலத்தில் இருந்த 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

    இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி.மு. 817 முதல் கி.பி. 717 வரையில் இருந்தவர். இவருக்குப்பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.பி. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்த மதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிந்தார். பிறகு மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

    சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன. சுவேதாம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடைகள் அணிவர். இவரின் ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கௌபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள். (திக் + அம்பரம் = திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பர். இவரின் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும் திகம்பர சமணரும் உருவவழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தம் கோயில்களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள்.

    சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வட இந்தியாவில் காணப்படுகின்றனர். திகம்பர சமணர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே பெருந்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ் நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே. தமிழ் நூல்களிலே ஜைனர் என்றும், சமணர் என்றும், அமணர் என்றும், ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பர சமணரேயாவர். 

 ________________________________________________________

1.       ‘‘அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவனெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்றுமிகும்’ என்பதனாற் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும்’ என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, முன்னொற் றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து’ என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க’’ என்பது நேமிநாதம்; எழுத்ததிகாரம்; 10ஆம் செய்யுளுரை.

2.      நேமிநாத தீர்த்தங்கரரின் உறவினரான கண்ணபிரான், இனி உலகத்திலே தோன்றப்போகிற சமண தீர்த்தங்கரர்களின் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப்போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.  

2. சமணசமய தத்துவம்

.இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்;

    ‘உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும்
    செயிர்தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற
    துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக் காய்யுரைப்பன்;
    மயல்தீர்ந்த காட்சி யுடையோய்! இது கேண்மதித்தே’

என்பது மேருமந்தரபுராணம்.

    சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை நவபதார்த்தம் என்பர். இவை; உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோட்சம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.

     1. உயிர் (ஜீவன்); உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதியாகவுள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. நல்வினை தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்3.

     உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து நிற்கும். குடத்திற்குள் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளிகாட்டும்; பெரிய அறையில் வைத்த விளக்கு அறை முழுவதும் ஒளிகாட்டும்; அதுபோல, உடம்புகளின் அளவுக்குத் தக்கபடி உயிரானது பெரியதாகப் பரவியும் சிறியதாகச் சுருங்கியும் இருக்கும். ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்பது ஆருகதர் வழங்கும் பழமொழி.

     மேலும், உயிர்கள் வீட்டது, மாற்றது என இருவகைப்படும். வீட்டது எனப்படும் ‘மோக்ஷ ஜீவன்’ அறிவு விளங்கப்பெற்று இருவினைகளையும் நீக்கி வீடுபேறடையும் தன்மையுள்ளது. மாற்றது எனப்படும் ‘சம்சார ஜீவன்’ நல்வினை தீவினைகளிற் கட்டுண்டு அவ்வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நரகத்திலும் சொர்க்கத்திலும் பிறப்பதும் இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நரகர், தேவர் என்னும் பிறப்புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவிகளிலே வீடுபேறடையா. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடுபெறும் வாய்ப்பு உடையன. அதுவும் துறவு பூண்டவர்களுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தார்க்கு வீடுபேறு கிடையாது.

     2. உயிரல்லது (அஜீவன்); புத்கலம், தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் இவை ஐந்தும் உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம். இவைகளும் உயிரைப் போன்றே அனாதியாக உள்ளன. அதாவது, இவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிர்களின் இயல்பாகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளைச் செய்து அவ்வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைத் துய்த்துப் பல பிறவிகளிலும் பிறந்து இறந்து உழல்வதும் பின்னர், நல்லறிவும் நன்ஞானமும் பெற்று இருவினைக் கட்டறுத்து வீடுபேறடைவதும் ஆகிய இத்தன்மைகள் உயிரல்லன வாகிய இந்த அஜீவப் பொருள்களுக்குக் கிடையா. இந்த ஐந்து அஜீவப் பொருள்களின் இயல்பை விளக்குவோம். புத்கலம் என்னும் பொருள், உயிர்களில் படிந்து அவற்றைப் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்விக்கும் தன்மையுள்ளது. புத்கலம் என்பதில் ஐந்து புலன்களும், ஐம்புலன்களும் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெயிலும், நிழலும், ஒளியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு பூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்குமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) மாறும் தன்மையுள்ளது இந்தப் புத்கலம். புத்கலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம், துக்கம் முதலியவற்றையும் பிறத்தல் வாழ்தல் இறத்தல் முதலியலற்றையும் புத்கலப்பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்றை அடைவது புத்தகலப் பொருளினாலேதான்.

     தர்மம் அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்திகாயம் என்றும் கூறப்படும் (இவற்றைப் புண்ணியம் பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம் அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு). தர்மம் அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறது அவ்வாறு உயிர்கள் இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப்பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல் ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின்

உதவியினாலாகும். இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்கலங்களால் உண்டாகும்

பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

    ‘‘தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்
    பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய்
    அப்படித் தாக அதன்மாத்தி காயமும்
    எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்’’

                               (மணிமேகலை 27;187 - 190)

எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.4

     காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.

    ‘‘காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்
    மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆகும்’’

                              (மணிமேகலை 27;191 - 192)

     ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம்கொடுப்பது ஆகாயம்.

    ‘‘...ஆகாயம் எல்லாப் பொருட்கும்
    பூக்கும்இடங் கொடுக்கும்புரிவிற் றாகும்’’

                             (மணிமேகலை, 27;193 - 194)

     ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடங்கொடுத்து நிற்பது.

     இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.

3,4. புண்ணியம், பாவம் (நல்வினை, தீவினை); (இவற்றை, மேலே அஜீவப் பொருள்களில் கூறப்பட்ட தர்மம் அதர்மம் எனக் கருதுவது தவறு. இவை வெவ்வேறு பொருள்கள் என்பது மேலே விளக்கப்பட்டது). இந்தப் புண்ணிய பாவங்கள் மூன்று வகையாக உயிருடன் கலக்கின்றன. மனத்தினால் நினைப்பதும் வாக்கினால் சொல்வதும் காயத்தினால் செய்வதும் ஆக மூன்று வகை நல்ல எண்ணங்களாலும் நல்ல சொற்களினாலும் நல்ல செய்கைகளினாலும் பெறப்பட்ட புண்ணியமானது, உயிர்களை மனிதராகவும் தேவராகவும் பிறக்கச்செய்து அறிவு, செல்வம், இன்பம், புகழ், மேன்மை, சிறப்பு முதலிய நன்மைகளை யடையச் செய்கிறது. தீய எண்ணங்களாலும், தீய சொற்களாலும், தீய செய்கைகளினாலும் உண்டான பாவமானது உயிர்களை நரககதி, விலங்குகதி முதலிய இழிந்த பிறப்புகளில் பிறக்கச் செய்து அறிவின்மை, துன்பம், இகழ்ச்சி, வறுமை, சிறுமை முதலிய துன்பங்களை அடையச் செய்கிறது.

       5. ஊற்று (ஆஸ்ரவம்): நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல, நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் உயிரில் சுரப்பது (சேர்வது) ஊற்று எனப்படும். மனம் வாக்கு காயங்களின் வழியாக ஊற்றுக்கள் உயிரிடம் வந்து சேர்கின்றன. இதனைக் கன்மத் தொடர்ச்சி அல்லது பொறிவழிச் சேறல் என்றும் கூறுவர்.

       6. செறிப்பு (ஸம்வரை): மேலே கூறப்பட்ட இருவினைகளும் சுரக்கும் ஊற்றினது வழியை அடைத்து விடுவது செறிப்பு அல்லது ஸம்வரை எனப்படும். உயிர், முன்பு செய்த இருவினைகளை மறுபிறப்பில் துய்த்து ஒழிக்கும் போதே புதிதாக வினைகளைச் செய்து மீண்டும் கர்மத்தைத் தேடிக்கொள்கின்றன. உயிர்கள் தாம் முன்பு செய்த வினைப்பயன்களைத் துய்த்து ஒழிக்கும் போது, புதிய கர்மங்கள் வந்து சேராதபடி தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பது தான் செறிப்பு என்பது, ஒரு குளத்திற்கு நீர் வரும் கால்வாய்களை அடைத்துவிட்டால், அக் குளத்தில் மேன்மேலும் நீர் பெருகாமல் தடைப்படுவது போன்று, மனம் வாக்கு காயம் ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

       7. உதிர்ப்பு (நிர்ஜரை); இருவினை ஊற்று உயிரினிடத்து மேன்மேலும் பெருகாதபடி தடுத்தபின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஜரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம், சுக்கிலத்தியானம் முதலியவற்றால் செய்ய வேண்டும்.

    ‘‘வரும்பாவம் எதிர்காத்து மன்னுந்தம் பழவினையும்
    ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றான்’’.
                                (நீலகேசி, மொக்கல 312)

     இதன் பொருள், ‘‘வருகின்ற கர்மங்களைக் குப்தி, சமிதி முதலாயினவற்றால் அடைந்து தபஸ் ஸம்ய மாதிகளால் நின்ற கர்மங்களை நிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் கண் மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவதென்று சொல்லுவது’’ (சமயதிவாகர வாமன முனிவர் உரை).

       8. கட்டு (பந்தம்); மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலிய வற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு  அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தௌ¤த்தால், அவ்விரும்பு நீரை இழுத்துக்கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன் கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக்கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. உயிரைத் துணியாகவும், ஐம்புலன் வாக்கு காயம் முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுக்காகவும் உபமான உபமேயப்படுத்திக் கூறுவர்.

       9. வீடு (மோக்ஷம்); ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவலதரிசனம், கேவல வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோக்ஷம் அல்லது வீடு எனப்படும்.

    ‘‘வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்
    அருவினைப்பயன் அனுபவித் தறுத்திடுதல்
    அது வீடாகும்’’ (மணிமேகலை, 27;199 - 201)

     இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமண சமய நூல்களில் கண்டுகொள்க.

     குறிப்பு: சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

     மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒரு தன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத் திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாதது.

    ‘‘மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள்
                                            தம்மைப்
    பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி
    உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும்
    இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்’’.

                               (சிந்தாமணி, கேமசரியார், 25)

     கீழ்க்காணும் சித்திரம் சமண சமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது


பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

     மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.

 ________________________________________________________

3. தொடர்புரை I காண்க.

4. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) "தன்மம்... நன்மையைப் பயப்பது; அதன்மம்... "தீமையைப் பயப்பது" என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.    

3. சமணமுனிவர் ஒழுக்கம்

வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.

     பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர். அவையாவன:- மாவிரதங்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம்; திகம்பரம், நீராடாமை, பல்தேய்க்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக விளக்குவாம்.

     மாவிரதங்கள் ஐந்து: 1. அகிம்சை, 2. வாய்மை, 3. கள்ளாமை, 4. துறவு, 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களையும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

     1. அகிம்சை : ‘‘அகிம்சா பரமோ தர்ம’’ என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இந்நான்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது, ‘‘ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்ல மாட்டேன்; கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவு மாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்’’, என்று உறுதி கூறிச் சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

     2. வாய்மை : அஃதாவது பொய்யாமை. ‘‘பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கையின்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலுங் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது:

     ‘‘என்னை?

    ‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்’(குறள். 292)

என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்த மாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது.....................ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது’’

    ‘‘நான் எப்பொழுதும் மெய்ம்மையே பேசுவேன்; ஒரு போதும் பொய் பேசமாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்டவும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்ம்மையே பேசுவேன்,’’ என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.

     3. கள்ளாமை: எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். ‘‘நாட்டிலாயினும் காட்டிலா யினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை - அஃது அற்பமானதாக இருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ள தாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும்-, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை  எடுத்துக் கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன். மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்’’ என்று உறுதி கூறிச் சமண  முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

    4. பிரமசரியம்: அஃதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக்  காயங்களால், செய்யாதிருத்தல்.

    ‘‘தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்’’ என்று கூறிச் சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

    5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம்’ என்பர். 

    ‘‘அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து’’                   (குறள்: 461)

    என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.

     ‘‘உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்’’, என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.

     இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:

    ‘‘ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின்
    மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப்
    பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
    செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்’’
                                     (சிந்தாமணி, 2834)

    ‘‘கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப்
                                   பிறர்ம னைகள்மேல்
    சேற லின்றிச் செழும்பொருண்மேல் சென்ற சிந்தை
                                       வேட்கையினை
    ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடிய தாமென்றான்
    நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா
                            நோக்குவான்.’’ (நீலகேசி, 40.)

     சமிதிகள் ஐந்து : 1. இரியை, 2. பாஷை, 3. ஏஷணை, 4. ஆதான நி«க்ஷபனை, 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவாம்:

     1. இரியா சமிதி: சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். ‘‘நூற்கதிகொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,’’ நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய  சிற்றுயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப் பார்த்துச் சமணத் துறவி நடக்க வேண்டும். இது பற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

       2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம், பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

       3. ஏஷணா சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத் துறவி யாசித்துப்பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

       4. ஆதான நி«க்ஷபனா சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் எறும்பு முதலிய சிற்றுயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

       5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங்கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழு பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவையுள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

     ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்க வேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு,யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு  இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய்களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமண முனிவர் ஐம்பொறி களாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்கவேண்டும்.

    ‘‘மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
    ஐவாய வேட்கை அவாவினை - கைவாய்
    கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
    வலங்காது வீடு பெறும்.’’

என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

     ஆவஸ்யகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:

        1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதி கிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன. இவற்றின் விளக்கம் வருமாறு:

       1. சாமயிகம்:

            இன்ப துன்பம், நன்மை தீமை, உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.

      2. துதி:

            இருஷபர் முதலிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.

      3. வணக்கம்:

           அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீ¬க்ஷ கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.

      4. பிரதிகிர்மணம்:

            பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக் கொள்ளுதல்.

      5. கழுவாய்:

           அஃதாவது பிராயச்சித்தம். சமண முனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்துவிட்டால், அதனையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக்குற்றத்தைக் கழுவுதல்.

    ‘‘ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
    நின்று நினைத்திரங்கற் பாற்று.’’

    ‘‘தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கித்
    தூயவழி நிற்றலும் அற்று’’             (அருங்கலச் செப்பு.)

      6. விசர்க்கம்:

            காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும்போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.

     ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையையடைந்த சமண முனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ் வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன. 1. லோசம், 2. திகம்பரம், 3. நீராடாமை, 4. தரையிற் படுத்தல், 5. பல்தேய்க்காமை, 6. நின்று உண்ணல், 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.

        1. லோசம்: அஃதாவது மயிர் களைதல், சமண முனிவர் துறவுகொள்வதற்கு முன்னர்த் தீ¬க்ஷபெறுவர். தலைமயிரைக் களைவது தீ¬க்ஷயில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களையவேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச்செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலிமையப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின்மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

       2. திகம்பரம்: அஃதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீங்கிய சமணமுனிவர், அதுதொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெயிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசுகு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதும் உடம்பு தமதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாகும்.

       3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பர நிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான (நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை’’ (மொக்கல. 318 ஆம் பாட்டுரை).

    ‘‘செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம
    வற்றவிட்டார் .... நம்தொழு தெய்வமே’’

என்பது திருநூற்றந்தாதி.

     சமண முனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச் சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமண முனிவர், உடற்றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமை பற்றியே சமணமுனிவர் நீருண்ணும்போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

     4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

     5. பல் தேய்க்காமை: உடம்பும் மிகை என்று தமது உடம்பையுந் துறந்த சமண முனிவர் பல் தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

     6. நின்று உண்ணல்: சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ளவேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கிவிட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப் போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

     7. ஏக புக்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை, உண்ணுதல், சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவுகொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அஃதாவது, பகல் நேரத்திலேயே சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ளவேண்டும்.

     இதுகாறும், கூறிய இவையே சமண முனிவர் கைக் கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

     சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்கு மிஞ்சிச் செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் ‘‘கடுநோன்பிகள்’’ என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.

     ‘‘யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தி யார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி) துறந்தனம். ...........யாங்கள் பலகாலுண்ணவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், ‘‘சக்தி தத்ஸ தியாக தபஸி’’ (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெயினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?

    ‘‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு.’’                  (குறள். 241)

என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்த லல்லது வெயில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி அழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெயில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?’’ (மொக்கல, 87ஆம் பாட்டின் உரை)

     இதுகாறும் கூறிய இவை யதிகர்மம் ஆகும். அஃதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.

4. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
    தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’

என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்.5

     இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன: 1. கொல்லாமை (அகிம்சை), 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்), 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்), 4. பிறன் மனை விரும்பாமை, 5. பொருள் வரைதல், இவை ஐந்தும் ‘அணுவிரதம்’ என்று கூறப்படும்.

     இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்ட வேண்டும் என்னும் வரையறுத்துக் கொண்டு, அவ்வரையறைப்படி பொருளை ஈட்டுவதாகும். நிலபுலம், வீடுவாசல், பணம் காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடுமாடு முதலிய பொருள்களை இவ்வளவுதான் ஈட்டுவேன்; இதற்குமேல் சம்பாதிக்கமாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்.

     இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம்மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

     தேன் உண்பது ‘பாவம்’ என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன் புழுக்களைக் கொன்றும் உயிர்க் கொலைகளைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் விரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள். மருந்தைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டியிருந்தால், தேனை விலக்கிச் சர்க்கரைப் பாகுடன் கலந்து கொடுப்பது சமண மருத்துவரின் மரபு.

     சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை என்பது. சூரியன் மறைந்த பிறகு உணவு கொள்ளக்கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத்தார்க்கு இன்றியமையாதன. கீழ்க்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது.

    ‘‘கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை
    ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோ டிவைபிறவும்
    பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு
    நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்’’

     திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன:

   ‘‘விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
         விழைவார், கொலையினை விழையார்; பொய்
    உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
         உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
    சுரையால் உணர்வினை அழியார்; அழிதசை
         துவ்வார்; விடமென வெவ்வாறும்
    புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
         புகழார்; குரவரை இகழாரே’’

     இச் செய்யுள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்பிடித்தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கெண்டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர் யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அச் செய்யுள் இது:

   ‘‘செய்யும் வினையும் இருள்உண் பதுவும்
         தேனும் நறவும் ஊனும் களவும்
    பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
         பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
    கையும் முகமும் இதழும் விழியும்
         காலும் நிறமும் போலும் கமலங்
    கொய்யும் மடவார் கண்வாய் அதரங்
         கோபங் கடியுந் தீபங் குடியே’’

     இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.

   ‘‘பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல்
    பொருள்வரைதல் மத்தம்மது புலைசுணலின் நீங்கல்
    பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல்
    மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்’’

என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித்திரன் அறங்கேள்விச் சருக்கம், 173) இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

     திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக்கூடாது.

     தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையாதிருத்தல்; 2. அசட்டைத் தனத்தினால் பூச்சிகளைச் சாகவைக்காதிருத்தல்; அஃதாவது பால், எண்ணெய், நீர் முதலியவற்றை மூடி வைக்காதபடியால் ஈ, எறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 3. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்களை வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிறருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டாதிருத்தலும் ஆம்.

     இருபோகம் வரைதல் என்பது போகப் போக பரிமாண விரதம். அஃதாவது போகப் பொருள்களை வரையறுத்தல். உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள், காய் கறிகள் சிற்றுண்டி முதலிய உணவுப் பொருள்கள், பருகும் பால் பாயாசம் முதலிய பானவகைகள், சந்தனம் வாசனைத் தைலம் மல்லிகை ரோசா நறுமணப் பொருள்கள், குதிரை மாடு முதலிய ஊர்திகள், பஞ்சணை முதலிய சயனப் பொருள்கள், காலில் அணியும் பாதர¬க்ஷ முதலிய போகப் பொருள்கள் ஆகிய இவற்றில் இன்னின்ன பொருள்களை உபயோகிப்பதில்லை என்று விரதம் செய்து கொள்ளுதல். இவை பொய், களவு, கொலை முதலியன செய்யா திருப்பதற்கு உதவியாக உள்ளன.

     சிக்கை என்பது சிக்ஷ£விரதம். இது நான்கு வகைப்படும். அவை: - தேசாவதாசிகம், ஸாமாயிகம், புரோஷதோபவாசம், அதிதி ஸம்விபாகம் என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்.

     தேசாவதாசிகம் என்னும் விரதம் மேலே கூறப்பட்ட திசை விரதம் போன்றது. இந்தத் திசையில் இந்த எல்லைக்கு அப்பால் செல்வதில்லை என்று உறுதிசெய்து கொண்டு அதன்படி நடத்தல்.

     சாமாயிக விரதம் என்பது தியானத்தில் அமர்ந்திருத்தல். குறைந்த அளவு நாற்பத்தெட்டு நிமிடமாவது கோயிலிலோ அல்லது வீட்டிலோ அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வது. இதைக் காலை நடுப்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளில் செய்யலாம். ஆனால் காலையில செய்வதே சிறந்தது. சாமாயிகம் செய்யும்போது மனம் வாக்குக் காயங்களினால் பாவச் செயல்களை நினைக்காமலும் பேசாமலும் செய்யாமலும் இருக்கவேண்டும்.

     புரோதோபவாசம் என்பது போசத விரதம் என்றும் சொல்லப்படும். ஓரிரவும் ஒரு பகலும் ஆகிய ஒரு நாள் முழுவதும் உணவு கொள்ளாமலும் நீர் அருந்தாமலும் உயர்ந்த ஆடை அணிகள் அணியாமலும் இணைவிழைச்ச இல்லாமலும் விரதம் காத்தல். இந்த விரதத்தை மாதத்தில் நான்கு நாள் செய்யவேண்டும். பிற்காலத்தில் துறவு கொள்ளவிரும்பும் சமணர் இந்த விரதத்தை மாதத்தில் ஆறுமுறை செய்வது உண்டு. சமணப் பெண்மணிகள் இந்த விரதத்தை அதிகமாகச் செய்வது வழக்கம்.

     அதிதி சம்விபாக விரதம். இது வையா விரதம் என்றும் கூறப்படும். துறவிகளாகிய சமண முனிவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்களில் எதையேனும் அளிப்பேன் என்று விரதம் செய்துகொண்டு அதன்படி ஒழுகுதல் இந்த விரதமாகும். சமண முனிவர் இல்லறத்தாரிடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்கள் எவை என்றால், உணவு, நீர், பழம், கமண்டலம், மருந்து, உடை முதலியனவும் உபயோகப்படுத்திக்கொண்டு திருப்பிக் கொடுத்துவிடுகிற கம்பளி, படுக்கை, ஆசனம் முதலிய பொருள்களுமாம். இந்த வையா விரதம், துறவறத்தாரை இல்லறத்தார் போற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது. இல்லறத்தார் இந்தப் பொருள்களைத் துறவிகளுக்குக் கொடுக்கும்போது பணிவிடையாளரைக் கொண்டு கொடுப்பிக்காமல் தாமே தமது கைகளால் மனமுவந்து கொடுத்தல் வேண்டும். இவற்றைப் பெற்றுக் கொள்ளும் துறவியானவர், தமக்கு வருகையை முன்னரே தெரிவிக்கக்கூடாது; தமக்கு இன்னபொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் கூடாது.

     இவ்வாறு சமணசமயத்து இல்லறத்தார்; தாமும் அறவழியில் ஒழுகித் துறவறத்தாரையும் நன்கு போற்ற வேண்டும் என்னும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமணத் துறவிகளைச் சமண இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மிக்க ஆர்வத்தோடு போற்றி வந்தார்கள். இவ்வாறு போற்றுவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுவர். சமணசமய நூல்களில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

   துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.                         (குறள்)

என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைந்திருந்தது சமணசமயத்து இல்லற வாழ்க்கை.

 ________________________________________________________

5. தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர், சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.     

    ‘‘நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப்போன்றுதான் உடை உடுத்து இருப்பார்கள்’’ என்று கூறியபோது அந்த நண்பர், ‘‘அப்படியா’’ என்று அதிசயப்பட்டார்.

5. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

சமணர்களின் கடைசித் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72 ஆவது வயதிலே கி.மு. 527 இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர், கேவல ஞானம் வாய்க்கப் பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்6. கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு சுணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

     மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குருவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்பு சுவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமித்திரரும், அவருக்கும் பின்னர் அபராசிதரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும், அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமய குரவராக இருந்தனர். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தார். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322 - 298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சந்தர் காலத்தவன்;  இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்7.

     சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதையறிந்து அச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும், அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக் குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாக முனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர், கி.மு. 297 இல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.8

     இச்செய்திகள் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி.மு. 931 இல்) இயற்றிய பிருகத் கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி.பி. 1838 இல்) இயற்றிய ‘‘ராஜாவளி கதெ’’ என்னும் நூலிலும் சமணர்களின் கர்ணபரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக் கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

     எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவச்செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமணசமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென்திசை நோக்கிவந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத் தக்கது.    

     வட நாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத்  துறவிகளும், மைசூரில் தங்கி வாளா காலங் கழித்திருக்கமாட்டார்கள். தமது மதக் கொள்கையைப் பரப்புவதையே தமது நோக்கமாகக் கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ்நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது.

     இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும் பௌத்த மத நூலில், இலங்கையிலே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி.மு. 377 முதல் 307 வரையில் இலங்கைத் தீவை அரசாண்ட பாண்டு காபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரி, கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக் குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.

     வட இந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட இந்தப் பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமண சமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென்றிருக்க வேண்டும்; வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியாக நேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. ஏனென்றால், சமணசமயத் துறவிகள், ஆறு முதலிய சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர, கடலில் பிரயாணம் செய்யக்கூடாது என்பது அந்த மதக் கொள்கை. ஆகவே, வட இந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். இலங்கைக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக்கூடிய அண்மையில் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம்.

     இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. மகாபாரத காலத்திலே, அஃதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22 ஆவது தீர்த்தங்கரராகிய நேமி நாத சுவாமி, கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணதீர்த்தங்கரராகப் பிறந்து சமணமதத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன: இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. 

     கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:

     அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் ‘‘துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து’’ காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்; (தொல்: எழுத்து, பாயிரம் உரை)

     ‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

     (தொல்: பொருள். அகத்திணை 32 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை)

     மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ் நாட்டிற் கொண்டுவந்து குடியேற்றிய செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஒரு அகத்தியர் வேளிரையும்  அருவாளரையும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த வரலாறாக இருக்கவேண்டும்.

     கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்கவேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ் நாட்டில் குடியேறியபின், சேர சோழ பாண்டிய அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடையவராக வாழ்ந்து வந்தனர் என்று சங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘அருவாஹி (ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செட்டி செய்வித்த குகை’’ என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது.10     

     இதில் கருதவேண்டியது என்னவென்றால், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர்தான் இச்சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பதும் ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தான் போலும்.

     கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணசமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்தபிறகு கண்ணன் பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலை நாட்டினார்கள் என்றும் தெரிந்தது. கண்ணன் பலராமன் வணக்கம் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலை எடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ணபிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாலின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆதாரத்துடன் தௌ¤வாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு நிறுத்துகிறோம்.

     இச்செய்திகளை இங்குக் குறிப்பிட நேர்ந்த காரணம் என்னவென்றால், கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - கண்ணபிரான் வாழ்ந்திருந்த மகாபாரதக் காலத்திலேயே - சமண சமயம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கேயாகும். கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்தியச் சரித்திர நூல்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியினாலே, கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினராக நேமிநாத தீர்த்தங்கரரும் சரித்திர காலத்தவர் ஆவார். ஆகவே, நேமிநாத தீர்த்தங்கரர் காலத்திலே - கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக் காலத்திலே - அகத்திய முனிவருடன் தமிழ்நாடு வந்த பதினெண்குடி வேளிர் அருவாளர் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருத்தல் கூடும். மிகப்பழைய அந்தக் காலத்திலே சமயப்பகையும் காழ்ப்பும் அதிகமாகப் பாராட்டப்படவில்லை. சமயப் பகையும் மதப் போர்களும் நிகழ்ந்தது மிகப் பிற்காலத்திலேயாகலின், சமரச நோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்தடன் இருந்தன. தமிழ்நாட்டிலிருந்த மதங்களில் மிகப் பழையமையானது சமணமதம் என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

 ________________________________________________________

6. சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.
7. மௌரியர் அல்லது மோரியர் தமிழ் நாட்டின்மீது படையெடுத்து வந்தனர் என்று சங்க நூல்களில் கூறப்படுகிற நிகழ்ச்சி இச் சந்திரகுப்த அரசன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுகின்றனர்.
8. வடக்கிருத்தல் - சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.
9. மகாவம்சம் x 97, 98, 99
10. No. 531 of 1937-38 Annual Rep. South Indian Epi. 1938.

6. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு

பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படுகிற சமண சமயத் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. சமணசமயம் தமிழ்நாட்டிலே ஏன் செல்வாக்கடைந்தது? ஏன் செழித்து வளர்ந்தது?

     பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்த வனாயினும், தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவானாயின் அவனைச் சமணர் போற்றிவந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு

என்னும் நூலிலே,

    ‘‘பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
    இறைவன் எனஉணரற் பாற்று.’’

என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும், அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர்.

     இரண்டாவதாகிய அடைக்கல தானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக்கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலூக்காவில் பள்ளிச்சந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச் செய்தியைக் கூறுகிற சாசனம் ஒன்று காணப்படுகிறது11. ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீரராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும், அப் புகலிடத்திற்கு வந்த அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்றவேண்டும் என்பது கண்ராதித்தப் பெரும்புள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகா தௌ¢ளாறு என்னும் ஊரிலே திருமூலீஸ்வரர் கோயில் முன் மண்டபத்தின் தரையில் ஒரு சாசனம் காணப்படுகிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சினான் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது12.

வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா கீழ்மின்னல்
என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம், சகலலோக சக்கரவர்த்தி வென்று
மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசருடைய 16 ஆவது
ஆண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சினான்
புகலிடமாக இருந்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது13.

     வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா வடமகாதேவிமங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம், சாம்புவராயர் சகலலோக சக்கரவர்த்தி ராஜநாரயாணனுடைய 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இது, மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிநின்று வென்றான் நல்லூர் என்னும் இடம் அஞ்சினான் புகலிடமாக இருந்தது என்று கூறுகிறது14. இதனால் அபயதானத்தைப் பண்டைக்காலத்தில் சமணர் நடைமுறையில் செய்துவந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.

     மூன்றவதாகிய ஒளடத தானத்தையும் சமணர். செய்துவந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்தது அம்மடத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தது. (சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய் நீக்கியசெய்தி, அவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றிற்குச் திரிகடுகம், ஏலாதி, சிறு பஞ்ச மூலம் என்று மருத்துகளின் பெயரிடப்பட்டதனாலும் அறியப்படும்.) உடல் நோயைத் தீர்க்க மருந்து கொடுத்தும் உள்ளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றி வந்தனர்.

     நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப் பெரியோர், (பௌத்தர்களும்கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர்.

    இதனாலேயே பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று; (பள்ளி என்றால் சமணப் பள்ளி அல்லது பௌத்தப்பள்ளி என்பது பொருள்). சமணர்களின் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்திலே பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட் செலவும் (எழுத்துக் கூலி) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதி வைத்துக் கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலே கன்னட நாட்டில் இருந்த, சமண சமயத்தைச் சார்ந்த அத்திமுப்பெ என்னும் அம்மையார் தமது சொந்தச் செலவிலே, சாந்திபுராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் எழுதுவித்துத் தானம் செய்தார் எனப.

     சமணசமயம் செழித்து வளர்வதற்கு மற்றொரு காரணமாயிருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண்டிருந்த தாய்மொழிப் பிரசாரம் ஆகும். சமணசமயத்தார் பௌத்த சமயத்தாரைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலே தங்கள் மத நூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டு மக்கள் எளிதிலே இந்த மதக்கொள்கைகளை அறிந்துகொண்டு அவற்றைக் கைக்கொள்ள முடிந்தது. பிராமணர், தம் வைதீக மத நூல்களை மக்களுக்கு விளங்காத மொழியில் எழுதிக்கொண்டதோடு அந்நூல்களை மற்றவர் படிக்கக்கூடாது, ஓதுவதைக் கேட்கவும் கூடாது என்றும், அப்படிச் செய்தவர் நாக்கை யறுக்க வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றவேண்டும் என்றும் தடைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்திக் கொண்டதுபோல் அல்லாமல், பரந்து விரிந்த மனப்பான்மையும் பெருந்தன்மையும் உள்ள சமணர்கள் தமது மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளிலே எழுதினார்கள். அதன்படி தமிழிலேயும் நூல்களை இயற்றினார்கள். இதனால் தமிழ் நாட்டில் சமணசமயம் செழித்தோங்கத் தொடங்கிற்று.

     மக்கள் அறியாதபடி வேறுமொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் என்றும் பெரும் பாவம் என்றும் சமணர் கருதினார்கள். ஆகவே, தம் மத நூல்களை மக்கள் பேசுகிற தாய்மொழியிலே எழுதினார்கள். இதனைச் சமணசமய வரலாறு ஒன்று நன்கு விளக்குகிறது.

     உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேண திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப்போலவே கல்விக் கடலைக் கரைகண்டவர் என்னும் புகழுடன் வாழ்ந்து வந்த விருத்தவாதி முனிவர் என்னும் சமணத் துறவி ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர். நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு இவர் ஒருவரையொருவர் காணும்படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதத்தில் தோற்றவர் வென்றவருக்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவுசெய்து கொண்டு வாதம் செய்யத் தொடங்கினர். அவ்வூர்ப் பொது மக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடுநிலையாளராக இருந்தார்கள். சித்தசேன திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வட மொழியில் வாது செய்தார். விருத்தவாதி முனிவர், வடமொழியில் நன்கு தேர்ந்தவராக இருந்தும், அந்த மொழியில் வாது செய்யாமல் நாட்டு மக்கள் பேசும் தாய்மொழியிலே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடு நின்றவர் முடிவு கூறினர். ஆகவே, உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார். 

     இதன் பிறகு சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் பேசிப் பயின்றுவந்த அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்தெழுதக் கருதித் தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசிப் பயின்றுவரும் அர்த்தமாகதி மொழியில் உள்ள நூல்களை வடமொழியில் எழுதிவைத்துப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டு வரை வாய் பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார்.

     இந்த வரலாற்றினால், சமணரும் பௌத்தரைப் போலவே, தாய்மொழியின் வாயிலாகப் பொதுமக்களுக்குத் தங்கள் மதக்கொள்கைகளைப் போதிக்க வேண்டும் என்னும் கருத்துள்ளவர் என்பதும், மக்கள் அறியாத வேறு மொழியில் நூல்களை எழுதிவைக்கப் பயன்படாதபடி செய்வது பெரும்பாவம் எனக் கருதி வந்தனர் என்பதும் விளங்குகிறது.

     இவ்வாறு விரிந்த மனப்பான்மையுள்ள சமணர்கள் தமிழ் நாட்டிலே தமிழ் மொழியில் தம் மதக் கொள்கைகளை எழுதினார்கள். வேறு பல நீதி நூல்களையும் நிகண்டு நூல்களையும் காவிய நூல்களையும் ஒழுக்க நூல்களையும் எழுதினார்கள். இவையும் சமணசமயம் தமிழ்நாட்டில் பரவுவதற்குக் காரணமாயிருந்தன.

     தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமாயிருந்தவர் அந்த மதத்துத் துறவிகள் ஆவர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று தம் சமயக் கொள்கைகளைப் போதிப்பதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். சமண முனிவரின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். (சங்கம் = கூட்டம்) ஆதிகாலத்தில் சமண சங்கம் ஒரே கூட்டமாக இருந்தது. இதற்கு மூல சங்கம் என்று பெயர்.

பிறகு சங்கம் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே, அது நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர் இடப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் கச்சை, அன்வயம் என்னும் உட்பிரிவுகள் இருந்தன.

    ‘‘கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா
    சுனக நந்தியும் குணக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா

    அனக நந்தியர்’’

     முதலியவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். நமண நந்தி என்பவரைச் சுந்தரமூர்த்திகள் குறிப்பிடுகிறார். இவர்கள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டுச் சாசனங்களிலும் நந்தி கணத்தைச் சேர்ந்த முனிவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவை: புட்பநந்தி, ஸ்ரீநந்தி, கனகநந்தி படாரர், உத்தநந்தி குருவடிகள், பெருநந்தி படாரர், குணநந்தி பெரியார், அஜ்ஜநந்தி, பவணந்தி படாரர், சந்திரநந்தி முதலியன. நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவரும் இந்த நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. 

      சேனகணத்தைச் சேர்ந்த சமண முனிவர்கள் பெயரையும் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார்.

    ‘‘சந்து சேனனும் இந்து சேனனும் தருமசேனனும் கருமைசேர்
    கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய பெயர்கொளா’’

என்று அவர் கூறியது காண்க. சுந்தரமூர்த்திகளும் தருமசேனன் என்னும் முனிவரைக் கூறுகிறார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணராக இருந்தபோது இந்தச் சேன கணத்தைச் சார்ந்திருந்தார் என்பதை அவர் பெற்றிருந்த தருமசேனர் என்னும் பெயரினால் அறியலாம். சந்திர சேன அடிகள், தேவசேன படாரர் முதலிய பெயர்கள் சாசனங்களிலும் காணப்படுகின்றன.

     சிம்ம கணத்தைச் சேர்ந்தவர்கள் வீரர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் கருமவீரன் என்பவரைக் குறிப்பிடுகிறார். கனகவீர அடிகள், குணவீர படாரர் என்னும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

     சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவரும், சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரும் தேவ கணத்தைச் சார்ந்தவர்கள் போலும்.

     பிற்காலத்திலே, நந்தி சங்கத்திலிருந்து (நந்திகணத்திலிருந்து) திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்னும் ஒரு பிரிவு ஏற்பட்டதைச் சாசனங்களினால் அறியலாம். மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது;

    ‘‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸ்தி அருங்களா
    அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வாராஸி பாரகைவU’’15

     வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி. 470 இல்) திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார் என்று கூறுவர்16

     எனவே, வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இரக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என்று கருதுகிறார்கள். இது தவறு. வச்சிரநந்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ்நூல்களையும் இயற்றியிருக்கக் கூடும். ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்ல என்று தோன்றுகிறது. மைசூர் நாட்டுச் சாசனங்கள் திராவிட சங்கத்தைச் சேர்ந்த சில சமண முனிவர்களின் பெயர்களைக் கூறுகின்றன:- 1. திரிகாலமுனி பட்டாரகர், திராவிட சங்கத்து புஷ்டகச்சையைச் சேர்ந்தவர், கி.பி. 900 - இல் காலமானார். 2. அஜிதசேன பட்டாரகர் என்னும் வாதிகரட்டர்; திராவிட சங்கத்து அருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர். 3. மௌனி பட்டாரகர், திராவிள சங்கத்துக் கொண்ட குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். கொண்ட குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். 4.  சாந்திமுனி திராவிள சங்கம், அருங்கலான்வயம் நந்தி கணத்தைச் சேர்ந்தவர். 5. ஸ்ரீபாலதிரை வித்யர், இவர் மாணாக்கர் வசுபூச்ய சித்தாந்த தேவர். இவர்கள் இருவரும் திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர்கள். 6. குணசேன பண்டிதர், திராவிள சங்கம், தவுளகணம், இருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர்.

     சமண சமயத்துப் பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும், ஆர்யாங்கனை என்றும், கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும். கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்றபோது அவர்களுடன் சென்ற கவுந்தியடிகள் சமணசமயத் துறவியாகிய கந்தியார் ஆவார். சமண சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் குரத்தியர் என்று வேறு பெயரும் உண்டு. குரத்தி என்பது குரவர் (=குரு) என்பதன் பெண்பாற் பெயராகும். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சமணசமயப் பெண்பால் துறவிகளைக் குரத்திகள் என்று கூறுகின்றன. தமிழ் நாட்டுச் சாசனங்களிலும் குரத்தியர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில வருமாறு: ஸ்ரீமிழலூர்க் குரத்திகள், சிறிவிசயக் குரத்தியார், திருச்சாணத்துக் குரத்திகள், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், ஸ்ரீமம்மை குரத்திகள், மாணாக்கியார் அரிட்டநேமிக் குரத்திகள் ஸ்ரீபட்டினிப்படார் மாணாக்கிகள், திருப்பருத்திக் குரத்திகள், பேரூர்க் குரத்திகள், மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள், கூடற் குரத்தியார், வேம்புநாட்டுக் குரத்தி, கனக வீரக் குரத்தியார், பிருதி விடங்கக் குரத்தி.

     சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சமணசமயம் பரவுவதற்காகப் பெரிதும் உழைத்து வந்தார்கள்.

     தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வந்தது. (மிகச் சிறந்த தொழிலாகிய பயிர்த்தொழிலை, பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்) சமணசமயம் பயிர்த் தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது. பயிர்த் தொழில் செய்யும் வேளாளரும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற் கொண்டிருந்தனர். எந்நாட்டிலும் எக்காலத்திலும் பொருளாதாரத் துறையில் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும், விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தைத் தழுவுவராயினர். சேர சோழ பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தனர். இவர்களால் சமணசமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமணசமயத்தவரல்லாத அரசரும்கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங்களையும் பொன்னையும் பொருளையும் ‘‘பள்ளிச் சந்தமாக’’க் கொடுத்து உதவினார்கள். 

     இத்தகைய காரணங்களினரலே, சமணசமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமணசமயம் (பௌத்த சமயம்கூட) தமிழ்நாட்டிலே செழித்துப் பரவியிருந்ததையும் வைதீக மதம் முதலிய ஏனைய மதங்கள் அடங்கிக் கிடந்ததையும் பெரிய புராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன.

    ‘‘மேதினிமேல் சமண்கையார் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
    ஆதி அரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார்பால்
    பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு
    ஏதமில் சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்.’’

என்று, திருஞான சம்பந்தரின் தந்தைசார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. மேலும்,

    ‘‘அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
    பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட................’’

     ஞானசம்பந்தர் பிறந்தார் என்று க்ஷ புராணம் கூறுகிறது. இன்னும்,

    ‘‘பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
    பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
    சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு
    மூழிநீர் கையிற் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.’’

    ‘‘பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
    செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி
    அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
    நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழுங் காலை.’’

     என்று பாண்டிய நாட்டிலும், சமணம் செழித்திருந்ததை அப் புராணம் கூறுகிறது. இச்செய்தியையே பிற்காலத்துத் திருவிளையாடற் புராணங்களும் கூறுகின்றன. பண்டைக் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த செய்தியை, இலக்கியங்களும், ஆங்காங்கே காணப்படுகிற சமண உருவச் சிலைகளும், சமணக் கோயில்களும், கல்வெட்டுச் சாசனங்களும் சான்று பகர்கின்றன என்று மேலே கூறினோம். இந்தச் சான்றுகளை யெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராய்ந்து நோக்குவோமானால், தமிழ் நாட்டில் முற்காலத்தில் சமணசமயம் எவ்வளவு செழித்துச் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு விளங்கும்.

 ________________________________________________________

11. 448 of 1937-38, Ep. Rep.1937-38, page 89.
12. 22 of 1934-35.
13. 35 of 1933-34
14. 62 of 1933-34, S.I. Epi.Rep.1933-34, Page 37.
15. E.C. Vol. V Hassan Taluk, 131, Arsikera Tq. I.E.C. Vol.IV Gundlupet Tq.27
16. Page XXI. Introduction Pravacana Sara by upadhye Digambaka Darna, P.74 J Bom, B.A.S Vol XVII.

7. சமயப்போர்

 பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதமும், ‘தேரவாதம்’ எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் ‘திராவிட மதம்’ என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

     மேற்சொன்ன ‘ஆருகதம்,’ ‘வைதீகம்’, ‘பௌத்தம்’, ‘ஆசீவகம்’ ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.

     தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.17 ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.

    ‘‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
    பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
    பற்றா மாக்கள் தம்முட னாயினும்
    செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’’
                            (மணிமேகலை, 1 - காதை 60-63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.

     சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டிவைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஓட்டிவிட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான்.18 இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.

     கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர்.19 இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.

     இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தௌ¤வாக்குகின்றன.

     இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவையாகும்:- வைதீகர் கொலை வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், ‘‘சுவர்ணதானமே, «க்ஷத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே கன்னியா தானமே’’ என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டுவந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவுபெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.

     வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள். வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப்போன்று கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவுதானத்தைமட்டும் சிறிதளவு  பெற்றுவந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன. 

     ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. (கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கி.பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர்20 காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தபிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

     செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங்காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து’ மதமும் ‘பக்தி’ இயக்கமுந்தான். இப்புதிய ‘இந்து’ மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

     பண்டைக் காலத்திலே, வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட’ மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர். உயிர்ப்பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைக் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.

     குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்த தென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும்  இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி யாது எனின்: தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தறுவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அஃதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.

     ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது. சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர்’ என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்னும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகப் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து’ மதம் என்பது. இப்புதிய ‘இந்து’ மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும்.

     இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து’ மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய ‘இந்து’ மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து’ மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து’ மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது. 

     ‘பக்தி’ இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ‘இந்து’ மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து’ மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடுதற் கென்க.

     அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,’ ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,’ ‘செந்தமிழோ டாரியனைக் சீரியனை,’ ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், ‘அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,’ ‘அந்தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை’ என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

    இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க’ என்றும், ‘சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க’ என்றும், ‘அருமறைச் சைவந் தழைப்ப’ என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறியொடுந் தழைப்ப’ என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

     புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு ‘அகச் சமயம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், ‘பக்தி’ இயக்கத்தின் துணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமண சமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று.

     ‘இந்து’ மதம் சமண சமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.
 ________________________________________________________

17. ஆசீவக மதத்தின் வரலாற்றினை இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் காண்க.
18. மணிமேகலை: 13 ஆம் காதை.
19. மணிமேகலை, 5 ஆம் காதை, 32-55
20. Ep. Ind. Vol iii, P186, Ep.Rep.1904-05, P.57.